Search This Blog

Friday, November 6, 2020

வனவாசம்

காவியத் தாயின் செல்ல மகன். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத வெள்ளித் திரையின் நிரந்தர நாயகன்.. காதலில் தத்துவத்தையும், தத்துவத்தின் மீது தீராக்காதலும் கொண்டவர்..வரும் சம்பளத்தையும் போகும் செலவையும் கணக்கு வைக்கத் தெரியாதச் செட்டி மகன் எழுதிய வனவாசத்தில், மடைதிறந்த வெள்ளம் போல் மனம் திறந்த எழுத்துக்கள்.

சிறு வயதிலிருந்தே தனக்கு இருந்த கற்பனை சக்தி; தன் மீது தனக்கு இருந்த நம்பிக்கை; எதையும் ரசிக்கக் கூடியத் தன்மை; நகைச்சுவை உணர்வு; திரைப் பயணத்தின் துவக்கம்; தலைமைத்துவப் பண்புகள்; 'காதல்' மன்னனாகவும் நல்லதொரு 'குடி'மகனாகவும் ஆன கதை; என்று வரிக்கு வரி அனுபவமாகத் தொடர்கிறது. 

சொந்த வாழ்க்கையைப் பற்றி 30 சதவீதமும்; மிகப் பெரிய கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் (அப்போதே கொள்கை ரீதியான அதன் வீழ்ச்சியைக் கண்டவர்) 70 சதவீதமும் கொண்ட இந்தப் புத்தகத்தில்; தன்னுடைய உழைப்பு; வஞ்சிக்கப்பட்ட உண்மை; அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் ; அதை கையாண்ட விதம் என்று இவர் எழுதியிருக்குப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒரே நேரத்தில் தருகிறது. 

பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தவர்; பாரதி சொல்வது போல் எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம் என்ற நெறிபடி அனைத்து கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். திரு மா போ சி அவர்களின் கருத்துகளுக்கு எதிர்கருத்தை மேலோட்டமாக எழுதாமல் ஆராய்ச்சியின் அடிப்படையில் படித்து பதில் எழுதியிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது மதிப்பு கூடுகிறது. இக்கால ஊடகப் பதிவாளர்கள் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று என்று தோன்றுகிறது. 




வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல் சாங்கிருத்யாயன்

"எனக்கு சாப்பிடனும் போல இருக்கு" என்று ஒருவர் சொன்னதை 

அவருக்கு ரொம்பப் பசிக்குதாம் 
இந்த நேரத்துல தான் அவரு சாப்பிடுவாராம் 
சாப்பிட்டு ரொம்ப நாளோ நேரமோ ஆச்சாம் 
இங்கே சாப்பாடு கிடைக்கலையாம் 
அவருக்கு வயிறு சரி இல்லையாம் 

என்று அவரவர்கள் புரிதலுக்கேற்ப (அல்லது வசதிக்கேற்ப) சொல்வது மனித இயல்பு ... 

மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள், கி மு கி பி , முகில் எழுதிய முகலாயர்கள் , மருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர், எஸ் ரா எழுதிய மறைக்கப்பட்ட இந்தியா போன்றப் புத்தகங்களை வாசிக்கும்போது இந்த அனுபவம்தான் ஏற்பட்டது. 

வரலாற்றுச் சம்பவங்களை சொல்லும்போது / எழுதும்போது அதை எழுதியவர்களின் புரிதலுக்கேற்ப (அல்லது வசதிக்கேற்ப)அந்தச் செய்தி வேறுபடும். இந்த அனுபவம் ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தைப் படிக்கும்போதும் வந்தது. (தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர்: திரு N ஸ்ரீதரன் ) . 

பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் வெவ்வேறு காலகட்டங்களில் (கி மு 6000 முதல் 20ஆம் நூற்றாண்டு வரை) வாழ்ந்த வளர்ந்த சமுதாயத்தைப் பற்றிக் கதை வடிவில் கதை மாந்தர்களின் வாயிலாக கூற முயற்சிக்கிறது. அலங்கார வார்த்தைகள் இல்லாமல் படிக்கச் சுவாரஸ்யமாக இருந்த காரணத்தினாலோ என்னவோ சில தினங்களுக்குள் முழு புத்தகத்தையும் படித்து முடிக்க முடிந்தது. 

காலம் காலமாக பேச்சாளர்கள் பயன்படுத்திய அல்லது நாம் படித்த அக்பர் பீர்பால் கதைகள் எல்லாமே கட்டுக்கதை என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? 

சிப்பாய் கலகமும் அதன் பின்னணியும் ஒரு ஏமாற்றுத் தந்திரம் என்று ஊகிக்க முடிகிறதா ? 

ஜமீன்தாரி முறை, உடன்கட்டை ஏறுதல், இரண்டாம் உலகப் போர் பற்றிய இவரின் விமர்சனங்கள் மற்றும் காந்திய சிந்தனைகளைப் பற்றிய இவரின் பார்வை போன்ற விஷயங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கும் இடங்கள். மதமாற்றத்தைப் பற்றி இவர் கூறும் செய்தியை செய்தியாய் மட்டுமே பார்த்தால் (அனைத்து மதத்தின்) முன்னோர்களும் எப்படி இருந்திருக்கிறார்கள் என்ற வியப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

வரலாற்றுச் செய்திகளை வரலாறாக மட்டும் பார்க்க விரும்பும் வாசகர்களுக்கு நல்லதொரு புத்தகம்.