Search This Blog

Tuesday, April 23, 2019

இரண்டு விரல் தட்டச்சு


பொதுவாகப் புனைக்கதைகளைப் புனைக்கதைகளாகவே கருதுவதுதான் எக்காலத்திற்கும் ஏற்றது. இந்தப் புனைகதைகளில் உள்ள அரைநிஜங்கள்தான் அந்தக் கதைக்கு உயிரூட்டுகிறது என்று சொல்லலாம். அப்படி நிஜங்களும் உண்மைகளும் கற்பனையும் பின்னப்பட்ட ஒரு 18 கதைகளின் தொகுப்புதான் இந்த இரண்டு விரல் தட்டச்சு. ஒவ்வொரு கதையும் ஒரு ரகம் அத்தனையும் தனி ரகம். 


பெரும்பாலான கதைகள் 2014 ஆண்டிற்கு முன் எழுதப்பட்ட கதைகள். பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை. 40 வயதினர் இந்தப் புத்தகத்தில் வரும் இடங்களையும், பொருட்களைப் பார்த்திருக்க வாய்ப்புண்டு. இல்லையெனில், கேள்வியாவதுபட்டிருப்பார்கள். நாம் மறந்து போன அல்லது மறக்கமுடியாத பல இடங்களுக்குத் தனது வார்த்தைகள் மூலம் வர்ணம் சேர்த்திருக்கிறார் ஆசிரியர். 
வளர்ந்த கிராமம், மாடு வளர்ப்பு, சோதிடம், சகுனம், இடுகாடு போன்ற வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் கதைகள். பெரும்பாலான கதைகளில் வரும் வரிகள் நாம் வீட்டில், அக்கம்பக்கத்தில் கேட்ட வரிகளாகத்தான் இருக்கும். கதாபாத்திரங்களும் வேறு பெயர்களில் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருக்க வாய்ப்புண்டு. அப்படி இருந்தாலும் இந்தப் புத்தகம் புதுசாக எதோ ஒன்றை ஒவ்வொரு கதையிலும் கொண்டுள்ளதுதான் இதன் சிறப்பு. 
இதில் பல கதைகள் என்னை ஏதோ ஒரு வகையில் வியக்க வைத்தாலும் இரண்டு கதைகள் மட்டும் மனத்தைத் தைத்தன. அம்மாவின் சாவுச் செய்தியைத் தந்தி அனுப்பவேண்டும். அதை அனுப்பும்போது ஒருவரின் மனநிலைமை எப்படி இருக்கும் என்று மிகக் குறைந்த வரிகளில் கண்ணுக்கு முன்னால் கொண்டு வரமுடியும் என்று நிரூபித்தக் கதை இது. அந்த அலுவலகத்தில் வேலைப் பார்ப்பவர்கள் தந்திகொடுக்க வருபவரை எப்படி நடத்துகின்றனர்? அங்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதைத் இயல்பாகக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். அம்மாவின் சாவுக்குத் தம்பி வந்துவிடுவானா என்ற எதிர்பார்ப்பையும் அதற்கான விடையையும் இரண்டரை பக்கக் கதை கட்டிப்போட்டுக் கண்ணில் நீரை வரவைக்கிறது. 
இன்னொரு கதை இரண்டு விரல் தட்டச்சு. எதற்காக இந்தக் கதை தலைப்பை புத்தகத் தலைப்பாய் வைத்தார் ஆசிரியர் என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கதையில் வரும் ரெமிங்டன் டைப்பரைட்டர் என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. 17 வயதில் என்னுடைய முதல் சம்பளம் 100 ருபாய். அது இந்த டைப்ரைட்டர் கொடுத்ததுதான். கல்லூரிக் காலங்களில் (பகுதிநேர) வேலை பார்த்துச் சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என்று சொல்லிக்கொடுத்ததும் இந்த ரெமிங்டன் டைப்ரைட்டர் தான்.. அதனாலேயே என்னவோ இந்தக் கதை எனக்கு ரொம்ப நெருக்கமாகிப் போனது. ஆனால் , அது மட்டும் காரணம் அல்ல என்பது என் மனதிற்கு மட்டுமே தெரிந்தால் போதும் என்பதால், ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நிறைய தந்தைமார்கள் அவர்கள் பட்ட துன்பத்தையும் வாழ்ந்த வாழ்க்கையையும் தன் மகனுக்கோ மகளுக்கோ சொல்வதேயில்லை என்பது தெளிவாகிறது. இதற்கான காரணத்தை அவர்களால் மட்டுமே சொல்ல முடியும். 
எது எப்படியோ திரு அசோகமித்திரன் எழுதிய இந்த "இரண்டு விரல் தட்டச்சு" புத்தகத்தைப் படித்தபோது நான் வாழ்ந்த பல பக்கங்களை அது புரட்டியது என்றுதான் சொல்லவேண்டும். நாளை என் வாழ்வில் நடக்கவிருக்கும் சில நிகழ்வுகளையும் (அது நடக்காமலும் போகலாம்) படம்பிடித்துக் காண்பித்தது போலவே இருந்தது...

Wednesday, December 5, 2018

மறைக்கபட்ட இந்தியா

பொதுவாக மேடைப் பேச்சை,  தகவல் தெரிவித்தல், மகிழ்வூட்டல், கதை  சொல்லுதல் என்றெல்லாம் வகைப்படுத்தலாம்.  இதில் தகவல் தெரிவித்தல் என்பது கேட்கப்  பயனுள்ளதாகவும், பல அரியத்  தகவலைக்  கொண்டுள்ளதாகவும்  இருக்க வேண்டும்.  அதைச்சுவை  குன்றாமலும் சொல்லுதல் அவசியம்.  இந்தக் கருத்து, எழுத்துக்கும் அவசியம் என்று சமீபத்தில் படித்த "மறைக்கபட்ட இந்தியா" புத்தகம் நிலைநாட்டியது. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்நூலை நமக்கு எழுதியவர் நாடறிந்த நல்ல எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணன். 

சுமார் 350 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் உள்ள 52 கட்டுரையிலும்  தகவல்  தகவல் தகவல் என்று இருக்கிறது.  ஆனால்  எங்கேயுமே தகவல் சொல்லும்  சுவை குறையவில்லை. நடையில் தெளிவு, சொல்ல வந்த செய்தியின் உண்மைத் தன்மை  அதற்கான ஆதாரங்கள் என்று பக்கத்திற்கு பக்கம் வியக்க வைத்திருக்கிறார் ஆசிரியர். நாமும்தான் அப்பப்போஊர் ஊராப்   போகிறோம் ஆனால் இவரளவுக்கு ஈடுபாட்டோடு போகிற இடத்தைப் பற்றித்  தெரிந்து வைத்திருக்கிறோமா  என்பது கேள்விக்குறிதான்.  



இந்திய தேசியக் கொடியின் வடிவமைப்பு எத்தனை முறை மாற்றப்பட்டது ? இதில்   வே சா பங்கு என்ன ? டாக்கா மஸ்லின் துணி நெய்தலின் வளர்ச்சி எப்படி தடுக்கப்பட்டது? இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கண மண என்று நாம் மனப்பாடம்   செய்துப் பாடும் பாடல் உண்மையில்  கூறுவது என்ன? ஆங்கிலேயர் தான் நமக்கு ரயில்பாதை போட்டுக்கொடுத்தார்கள் என்று பெருமைக்  கொள்கிறோம். போட்டது என்னவோ அவர்கள் தான். ஆனால்  அதை அவர்கள் சுயநலத்திற்காக போட்டார்கள் என்ற கண்ணோட்டம் யோசிக்கவைத்த  இடத்தில்  ஒன்று.  வெறும் வணிகத்திற்காக வந்த மேற்கிந்திய மக்கள் தாவர வளர்ச்சியையும் தனது லாபத்திற்கு பயன்படுத்திக்கொண்டார்கள்  என்று நினைக்கும் போது "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏத்த வேண்டும் வெளிநாட்டில்" என்ற மருதகாசியின் வைர வரிகள்ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது . ஆனால் அப்படி இருந்த ஆங்கிலேயர்களுக்குள் நல்லவர்களும் இருந்தார்கள் அவர்கள் எவ்விதம் உதவினார்கள் என்று சொன்ன இடங்கள் சபாஷ் போட வைக்கிறது ஆசிரியருக்கும் சேர்த்து.  

சுதந்திர போராட்ட காலத்தில் ரகசிய ரேடியோ (ஆசாத் இந்தியா ரேடியோ) மூலம் சுதந்திரத்  தாகம் ஊட்டிய திருவாட்டி உஷா மேத்தா, நேதாஜி அவர்களின் உழைப்பு, அகில உலகில் அவருக்கு இருந்த மரியாதை, காந்தியும் தாகூரும் கருத்து வேற்றுமையோடு இருந்தாலும் நல்ல நண்பர்களாக ஒருங்கே நாட்டிற்கு உழைத்தது, இண்டிகோ புரட்சி (இண்டிகோ விமானத்திற்கு இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை), திருடர்கள் ஜாக்கிரதை என்று ஏன் / எப்படி வந்தது; அதற்கு காரணம் யார், பங்களாதேஷ் வளர்ந்த / வீழ்ந்த கதை என இவர் பட்டியலிட்டு இருக்கும் கட்டுரைகளில் நெஞ்சைத் தொட்டவை. இது போன்ற கட்டுரைகள், எந்த விதமான புரட்சி வளர்ச்சிக்கு பாதை வகுக்கும் எந்த விதமான புரட்சி அழிவுக்கு பாதை வகுக்கும் என்று எதிர்காலத்திற்கு படம் பிடித்து காட்டும் காலக்கண்ணாடி என்றே தோன்றுகிறது.  யவனர்கள் மற்றும்  ரஷியர்களோடு வெவ்வேறு  காலக்கட்டத்தில் இந்தியாவுடன் கொண்ட பல்வேறு விதமான உறவுப் பாலங்களின்  கதைகள்  மிகவும் சுவாரஸ்யம். 

மொகலாய ஓவியங்கள் மற்றும் நுண்ணோவியங்கள் பற்றிய இரு கட்டுரைகளில்,  இவரின் வார்த்தைகள் மூலம் அந்த ஓவியத்திற்கு வேறு வகையான  வண்ணம் தீட்டி இருக்கிறார். ஒரு புத்தகம் படிக்கும் போது அது சம்பந்தமான இன்னொரு புத்தகத்தை வாசிக்கவோ அல்லது அதைப் பற்றிய தகவலை இன்னும் தேடவோத் தூண்டவேண்டும். அந்த வேலையைச்  சிறப்பாக செய்கிறது இந்தப் புத்தகம்.  

இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது. ஏற்கனவே சமூகத் தளங்களில் பலராலும் பார்க்கப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளையம், தகவலையும், செய்தியையும் கூச்சமே இல்லாமல்  திரும்ப ஒன்று அல்லது இரண்டு  மணி நேரம் பேசிவிட்டு போகின்றப்  பேச்சாளர்கள் இது போன்ற புத்தகத்தைப் படித்து வந்து புதிய தகவலை  அரங்கில் உள்ள மக்களுக்கு சொல்லலாம். சொன்னால் பேச்சாளர்களும் மதிக்கப்படுவார்கள். பார்வையாளர்களும் பயன்படுவார்கள். 

மறைக்கப்பட்ட இந்தியா என்னும் இந்த  நூல் பல அறியத் தகவலை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. "சஞ்சாரம்" என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு எஸ் ரா விற்கு வாழ்த்துக்கள்.