Search This Blog

Monday, November 16, 2020

சிலை பிறந்த கதை

 கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் - பம்மல் மற்றும் லிஷா இலக்கிய மன்றம் - சிங்கப்பூர் இணைந்து படைத்த பன்னாட்டு கண்ணதாசன் விழாவில் நடந்தப் பட்டிமன்றத்தில் பேசுவதாக இருந்தேன். அந்த வாய்ப்பு கடைசி நேரத்தில் நடந்த சில சம்பவங்களால் (இந்தியா செல்லவேண்டி இருந்து), பட்டிமன்றத்தில் பேச முடியாமல் போனது. ஆனால் அந்த நிகழ்ச்சியின் மூலமாக சில ஆளுமைகளோடு பேச மற்றும் பழக வாய்ப்பு கிடைத்தது. அப்படிக் கிடைத்த ஒரு ஆளுமை தான் நண்பர் திரு காவிரிமைந்தன். ஓரிரு முறைதான் அவரோடு பேசியிருந்தேன் அப்போது.

இந்தப் பட்டிமன்றத்திற்காக பேச்சினைத் தயாரிக்கும்போது கண்ணதாசன் மீது எனக்கிருந்த காதல் இன்னும் அதிகமானது (யாருக்குத்தான் அதிகமாகாது). அவரைப் பற்றிய சில புத்தகங்களைத் தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன். பின் ஒரு நாள் நண்பர் காவிரிமைந்தனோடு பேசும்போது "சிலை பிறந்த கதை" என்ற புத்தகத்தைப் பற்றி க் கூறி அதன் pdf fileஐ அனுப்பினார். அவர் பிறந்தநாள் அன்று எனக்குக் கிடைத்தப் பரிசு. ஒரே மூச்சாக படிக்க முயன்று ஓரளவுக்கு வெற்றிகண்டேன் என்றே சொல்லலாம். கருவிற்கு ஏற்ற தலைப்பு. ஏன் என்றால் மெல்லிசை மன்னரின் கனவில் வந்ததன் அடிப்படையில் உண்மையிலேயே தன்னுடைய உழைப்பால் இச்சிலையை பிரசவித்திருக்கிறார் காவிரிமைந்தன்.


நாமெல்லாம் "ஒரு ஊரில் ஒரு ராஜா" என்று கதை கேட்டு வளர்ந்த பரம்பரையில் வந்தவர்கள் . எந்த ஒரு செய்தியினையும் கதைவடிவில் அல்லது சம்பவங்களின் தொகுப்பாகச் சொல்லும்போது மக்களிடம் எளிதாகச் சென்றடையும் என்பதைப் பேச்சாளனாகப் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். அப்படி ஒரு புத்தகம் படித்ததில் மிக்க மகிழ்ச்சி. சென்னை தியாகராயநகரில் உள்ள கண்ணதாசனின் சிலையை நிறுவுவதற்கு பின்னால் இருந்து செயல்பட்ட மெல்லிசை மன்னர் மற்றும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம், மற்றும் எண்ணற்ற கண்ணதாசனின் ரசிகர்கள் ஆகியோரைப் பற்றி இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் பேசியிருக்கின்றன.
நிறைய சந்திப்புகள், சம்பவங்கள், நினைவலைகள் என்று பக்கத்திற்கு பக்கம் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் எழுதியிருக்கிறார். திரு சாலமன் பாப்பையா அவர்கள் கொடுத்த நன்கொடை, முனைவர் சரஸ்வதி ராமநாதன் அவர்களின் சந்திப்பு, சங்கத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு விழாக்களைக் கொண்டாடிய விதம், அதற்கு வந்த ஆதரவு மற்றும் மிரட்டல், சேலத்திலும் கோவையிலும் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நடந்த திருட்டு என்று பல்வேறு விஷயங்களைக் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார். நடுநடுவே இவரின் கவிதைகளையும் சில கவிதாஞ்சலிகளையும் கொடுத்திருக்கிறார்.
சின்ன விண்ணப்பம் : சில நிகழ்வின் புகைப்படங்களுக்கு கீழே அந்நிகழ்வைப் பற்றியத் தகவலை அடுத்த பதிப்பில் கொடுத்தால் கொஞ்சம் சுவை கூடும். அதே போல் சில படங்கள் ஒருமுறைக்கு மேல் சில இடங்களில் வந்திருக்கிறது. அதற்கு பதில் மேலும் புதிய தகவலையோ அல்லது வேறு புகைப்படமோ இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் யாரும் சென்னையில் கண்ணதாசனின் சிலையை இனி ஒரு நொடிப் பொழுதில் கடப்பது என்பது இயலாத காரியம்

Friday, November 6, 2020

வனவாசம்

காவியத் தாயின் செல்ல மகன். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத வெள்ளித் திரையின் நிரந்தர நாயகன்.. காதலில் தத்துவத்தையும், தத்துவத்தின் மீது தீராக்காதலும் கொண்டவர்..வரும் சம்பளத்தையும் போகும் செலவையும் கணக்கு வைக்கத் தெரியாதச் செட்டி மகன் எழுதிய வனவாசத்தில், மடைதிறந்த வெள்ளம் போல் மனம் திறந்த எழுத்துக்கள்.

சிறு வயதிலிருந்தே தனக்கு இருந்த கற்பனை சக்தி; தன் மீது தனக்கு இருந்த நம்பிக்கை; எதையும் ரசிக்கக் கூடியத் தன்மை; நகைச்சுவை உணர்வு; திரைப் பயணத்தின் துவக்கம்; தலைமைத்துவப் பண்புகள்; 'காதல்' மன்னனாகவும் நல்லதொரு 'குடி'மகனாகவும் ஆன கதை; என்று வரிக்கு வரி அனுபவமாகத் தொடர்கிறது. 

சொந்த வாழ்க்கையைப் பற்றி 30 சதவீதமும்; மிகப் பெரிய கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் (அப்போதே கொள்கை ரீதியான அதன் வீழ்ச்சியைக் கண்டவர்) 70 சதவீதமும் கொண்ட இந்தப் புத்தகத்தில்; தன்னுடைய உழைப்பு; வஞ்சிக்கப்பட்ட உண்மை; அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் ; அதை கையாண்ட விதம் என்று இவர் எழுதியிருக்குப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒரே நேரத்தில் தருகிறது. 

பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தவர்; பாரதி சொல்வது போல் எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம் என்ற நெறிபடி அனைத்து கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். திரு மா போ சி அவர்களின் கருத்துகளுக்கு எதிர்கருத்தை மேலோட்டமாக எழுதாமல் ஆராய்ச்சியின் அடிப்படையில் படித்து பதில் எழுதியிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது மதிப்பு கூடுகிறது. இக்கால ஊடகப் பதிவாளர்கள் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று என்று தோன்றுகிறது. 




வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல் சாங்கிருத்யாயன்

"எனக்கு சாப்பிடனும் போல இருக்கு" என்று ஒருவர் சொன்னதை 

அவருக்கு ரொம்பப் பசிக்குதாம் 
இந்த நேரத்துல தான் அவரு சாப்பிடுவாராம் 
சாப்பிட்டு ரொம்ப நாளோ நேரமோ ஆச்சாம் 
இங்கே சாப்பாடு கிடைக்கலையாம் 
அவருக்கு வயிறு சரி இல்லையாம் 

என்று அவரவர்கள் புரிதலுக்கேற்ப (அல்லது வசதிக்கேற்ப) சொல்வது மனித இயல்பு ... 

மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள், கி மு கி பி , முகில் எழுதிய முகலாயர்கள் , மருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர், எஸ் ரா எழுதிய மறைக்கப்பட்ட இந்தியா போன்றப் புத்தகங்களை வாசிக்கும்போது இந்த அனுபவம்தான் ஏற்பட்டது. 

வரலாற்றுச் சம்பவங்களை சொல்லும்போது / எழுதும்போது அதை எழுதியவர்களின் புரிதலுக்கேற்ப (அல்லது வசதிக்கேற்ப)அந்தச் செய்தி வேறுபடும். இந்த அனுபவம் ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தைப் படிக்கும்போதும் வந்தது. (தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர்: திரு N ஸ்ரீதரன் ) . 

பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் வெவ்வேறு காலகட்டங்களில் (கி மு 6000 முதல் 20ஆம் நூற்றாண்டு வரை) வாழ்ந்த வளர்ந்த சமுதாயத்தைப் பற்றிக் கதை வடிவில் கதை மாந்தர்களின் வாயிலாக கூற முயற்சிக்கிறது. அலங்கார வார்த்தைகள் இல்லாமல் படிக்கச் சுவாரஸ்யமாக இருந்த காரணத்தினாலோ என்னவோ சில தினங்களுக்குள் முழு புத்தகத்தையும் படித்து முடிக்க முடிந்தது. 

காலம் காலமாக பேச்சாளர்கள் பயன்படுத்திய அல்லது நாம் படித்த அக்பர் பீர்பால் கதைகள் எல்லாமே கட்டுக்கதை என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? 

சிப்பாய் கலகமும் அதன் பின்னணியும் ஒரு ஏமாற்றுத் தந்திரம் என்று ஊகிக்க முடிகிறதா ? 

ஜமீன்தாரி முறை, உடன்கட்டை ஏறுதல், இரண்டாம் உலகப் போர் பற்றிய இவரின் விமர்சனங்கள் மற்றும் காந்திய சிந்தனைகளைப் பற்றிய இவரின் பார்வை போன்ற விஷயங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கும் இடங்கள். மதமாற்றத்தைப் பற்றி இவர் கூறும் செய்தியை செய்தியாய் மட்டுமே பார்த்தால் (அனைத்து மதத்தின்) முன்னோர்களும் எப்படி இருந்திருக்கிறார்கள் என்ற வியப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

வரலாற்றுச் செய்திகளை வரலாறாக மட்டும் பார்க்க விரும்பும் வாசகர்களுக்கு நல்லதொரு புத்தகம். 




Sunday, December 29, 2019

உண்மை



1. 
பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்றத் தலைமைப் பெற்று பிரதமராகப் பல வருடங்கள் தொடர்ந்து இருந்த தாட்சர் பதவி விலகும்போது, அவர் அரசியல் முதிர்ச்சி காரணமாக தானாக முடிவெடுத்து ராஜினாமா செய்தார். முதல் சுற்று வாக்கில் பெரும்பான்மை கிடைத்தும், இரண்டாம் சுற்றிலும் கிடைத்துவிடும் நிலையில் கூட ராஜினாமா செய்வது சரி என்று முடிவெடுத்தார். இது அவரின் விவேகத்தை காட்டுகிறது. கட்சித் தலைமைக்கு வேறு இருவர் போட்டியிட்டு அதில் ஜான் மேஜர் வெற்றிபெற்றார். 

2. 
திருமதி தாட்சர் பதவி விலக முடிவெடுத்ததற்கு காரணம் - தாம் தோற்றுவிடுவோம் என்ற எண்ணம்தான். இரண்டாவது சுற்று நடந்தால், அதில் உங்களுக்கு வெற்றி கிட்டாது. ஆகையால் அதற்கு முன்பாகவே நீங்களே, முன் வந்து பதவி விலகி விடுவதுதான் உங்களுக்குப் பெருமையாக இருக்கும் என்று திருமதி தாட்சரின் ஆதரவாளர்களே அவருக்குக் கூறியதாகவும் அதன் காரணமாகத்தான் அவர், போட்டியிலிருந்து விலக முடிவெடுத்தார் 

3.
இரண்டாவது சுற்றில் நாம் வென்றிருப்போம். ஆனால் தோற்று விடுவோம் என்ற தவறான தகவலை நமக்குத் தந்து போட்டியிலிருந்து நம்மை விலக வைத்து விட்டார்கள். இது நமக்கு வேண்டியவர்களாகவே இருந்த சிலர் செய்த சதியாக  கூட இருக்கலாம். இந்த சதியினால்தான் வளைகுடா போரின்போது தான் பிரதமராக இல்லாமல் போனது (போர் சிக்கலை தீர்க்கமுடியாமல் போனதும் ) துரதிர்ஷ்டம் என்று திருமதி தாட்சர் வருந்துகிறார். 

கண்ணால் காண்பதும்  பொய் 
காதால் கேட்பதும்  பொய் 
தீர விசாரிப்பதும் (சில நேரங்களில் மட்டும்) மெய். 


Friday, October 18, 2019

சிம்ம சொப்பனம்

அல்லது சரித்திர சம்பவத்தை எழுதும்போது வெறும் சம்பவங்களின் கோர்ப்பாக எழுதலாம். இல்லை அதையே ஒரு கதை வடிவில் கோர்வையாக சுவைபட எழுதலாம். முதல் வகை பெரும்பாலும் (என்னை போன்றோருக்கு) சலிப்பு தட்டிவிடும். இரண்டாம் வகை  பெரும்பாலானோருக்கு ஆர்வத்தைக் கூட்டிடும் . சரித்திர நாயகர்களைப் பற்றிய புத்தகத்தை படிக்கும்போது பெரும்பாலும் நூலாசிரியரின் கண்கள் மூலம் தான் அந்த நாயகர்களைப் பார்க்க முடியும். ஆனால் சில நேரம் அந்த நூலாசிரியரைத் தாண்டி நம்மால் அந்த நாயகனை நம் கண்களால்  கண்  முன்னே  பார்க்க முடிகிறது என்றால் அது அந்த நூலாசிரியரின் திறமை என்று சொல்லலாம். அப்படி நான் பார்த்த ஒருவர் தான் பிடல் காஸ்ட்ரோ... "சிம்ம சொப்பனம்" என்ற நூலின் மூலம் தான் இவரைப் பார்க்கிறேன். நூலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் நூலாசிரியர் மருதன். 


ஆயிரம் குறைகளைச் சொன்னாலும்  கியூபாவை கியூபர்களுக்கு கொடுத்த மாவீரன் தான் இந்த பிடல் காஸ்ட்ரோ. இவர் எப்படியெல்லாம் போராடினார், எழுச்சித்தரும் வார்த்தைகள் என்னென்ன பேசினார், தன்னுடைய கல்லூரிக் காலங்களில் என்னென்ன போராட்டங்களை நிகழ்த்தினார்.. அமெரிக்கர்களை தைரியமாக எதிர்க்க எப்படியெல்லாம் தன் வாழ்க்கையைத் தொலைத்தார்  என்பதெல்லாம் புத்தகம் முழுவதும்  வருகிறது.. ஆனால் அவருடைய இளம்பருவத்தில் நடந்த சில நிகழ்வுகள் சுவாரஸ்யமானவை. 

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப காஸ்ட்ரோ அவருடைய தந்தையாரிடம் ஏறக்குறைய 10 11 வயதில் கேட்ட சில கேள்விகள் 
ஏழைகள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள்? 
பணக்காரர்கள் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள் ? 
ஏழைகளின் அன்றாட வாழ்வில் ஏன் முதலாளிகளைச் சார்ந்து இருக்கிறார்கள் ? 
என்பது போன்றவைதான். இதற்கு பெரும்பாலும் அவரின் பணக்கார அப்பா தந்த பதில் போய் படிக்கற வேலையைப் பாரு... 

கல்லூரி தேர்தலில் முதல் அரசியல் படியை எடுத்துவைத்து பிறகு நாட்டு அரசியலில் ஈடுபடும்போது பத்திரிகை நடத்துகிறார். தொடர்ந்து கட்டுரைகள் எழுதி மக்களை சிந்திக்கவைக்கிறார். பொதுக்கூட்டங்களில் பேசுவது வீட்டிற்கு வந்து அடுத்தப் பேச்சுக்கு எழுதுவது என்று மட்டுமே தன் வாழ்க்கையை கழிக்கிறார். இதெல்லாம் மிர்தா என்ற அழகிய பெண்ணை திருமணம் செய்தபின்பும் தொடர்கிறது. 

தேனிலவுக்கு அமெரிக்கா செல்கிறார்கள் இந்தப் புதுமண தம்பதியினர். மிர்தாவை அறையில் தங்கவைத்துவிட்டு வெளியில் சென்று இருக்கிற காசுக்கு மார்க்சியம் மற்றும் பல கம்யூனிச சிந்தனைகள் தருகிற புத்தகங்களை வாங்கி வந்து படிக்கலாம் என்று மனைவியையும் கூட்டு சேர்த்துக்கொள்கிறார். அமெரிக்கா போகப்போகிறோம் என்று தெரிந்த உடனேயே இதெல்லாம் எங்கு கிடைக்கும் என்று பார்த்துவைத்துவிட்டேன் என்று பெருமை வேறு பீத்திக்கொள்கிறார் புதுப் பொண்டாட்டியிடம். இதெல்லாம் தான் நம்ம நாட்டைக் காப்பாற்றப்போகும் சிந்தனைகள் என்று வேறு பிரச்சாரம் செய்கிறார் ஹோட்டல் அறையில். 

வீட்டில் எந்த வசதியும் இல்லை. பால்காரன் கடன், மளிகை  பாக்கி வீடு வாடகை என்று அத்தனையும் இருக்கிறது. எந்த வசதியும் இல்லாத வாழ்க்கையில் அவருக்கு இருந்ததெல்லாம் வசதியான நண்பர்கள். உயிரைக்கொடுக்கும் நண்பர்கள். வீட்டில் இருக்கவேண்டிய கட்டில் பீரோ எல்லாவற்றையும்  தவணை முறையில் வாங்கிக்கொடுக்கிறார்கள். கடன்காரர்கள் வந்து எல்லாவற்றையும் கொண்டுபோய்விடுகிறார்கள். இதைப்பற்றி காஸ்ட்ரோவிடம் நண்பர்கள் கேட்கும்போது இதெல்லாம் எங்க வீட்டோடதுதான் என்று தெரியாமல் போய்விட்டதே என்று மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் பத்திரிக்கையில் கட்டுரை எழுதப்போய்விடுகிறார். 

வழக்கறிஞர் ஆகிவிட்ட பின்  பணம் வரும் என்று எதிர்பார்க்கும் மனைவி  மிர்தாவுக்கு ஏமாற்றம் வருகிறது. குடும்பத்தை சரிவர நடத்த வேண்டிய பணத்தை தான் எதிர்பார்த்தார் என்றாலும் அதற்கும் வழி இல்லாமல் போகிறது. நியாயத்திற்காக போராடியதற்காக எதற்கு காசு வாங்கனும் .. அது கடமை என்று பேசும் கணவன் இருந்தால் அவளும் தான் என்ன செய்வாள். 

ஒரே ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் 200 பக்க புத்தகத்தில் 120 பக்கம் வரை அவரை யாரும் அவர் குடும்பத்திற்குள்ளேயே ஒதுக்கிவைக்க வில்லை. நண்பர்கள் யாரும் ஒதுங்கவில்லை. அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வழக்குகளில் தானே வக்கீலாக ஆஜராகிறார். நீதிமன்றத்தில் அவ்வாறு குற்றவாளி கூண்டைவிட்டு இறங்கி வழக்கறிஞராக மாறும் தருணத்தில் அந்த அங்கியைக் கூட பக்கத்தில் இருக்கும் நண்பர்கள்தான் தருகிறார்கள். 

ஒன்றே ஒன்று சொல்ல முடிகிறது.. இப்படியெல்லாம் யாரும் ஆதரவு தரவில்லை என்றாலும் 
 "எமக்குத் தொழில் கவிதை (கஸ்ட்ரோவிற்கு எழுத்து), நாட்டுக் குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என்ற பாரதியின் போக்கில்தான் வாழ்ந்திருப்பார் பிடல் காஸ்ட்ரோ... 

மீதமிருக்கும் பக்கங்களில்  இன்னும் இது போன்ற விஷயங்கள்  நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு வசிப்பினைத் தொடர்கிறேன்... 

Saturday, October 5, 2019

மனைவியின் கடிதம்

இந்தப் புத்தகத்தை பார்த்த போது ரவீந்திரநாத் தாகூரின் மனைவி அவருக்கு எழுதிய கடிதமாக இருக்குமோ என்று நினைத்தது உண்மைதான். Letters from a Father to his daughter என்கிற புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டதால் அது போல ஒரு புத்தகம் என்று நினைத்துவிட்டேன். ஆனால் உண்மையிலே அது அப்படி இல்லை. இரண்டு தேசத்திற்கு தேசியகீதம் எழுதிய ஒரே கவிஞர் என்ற பெருமை கொண்ட தாகூர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். வங்கமொழியில் இருந்து திரு தா நா குமாரசுவாமி மொழிபெயர்ப்பு செய்த இந்தப் புத்தகத்தில் மொத்தம் 7 கதைகள்.. 7 ம் வெவ்வேறு தளத்தில் பயணிக்கும் கதை என்றாலும் எல்லாவற்றிலும் மனித உணர்வுகளும் உறவுகளும் போட்டி போட்டுக்கொண்டு கண்முன்னே வந்துவிட்டு போகிறது. நான் வெவ்வேறு வேலைகளில் இருந்தபோதும் , சில கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், என்னுடன் வருவதை போலவே ஒரு 10 நாளாக உணர்ந்து வருகிறேன். கச்சிதமான பாத்திரப்படைப்பு கனமான காட்சியமைப்பு... 



முதல் கதை போஸ்ட்மாஸ்டர்:
கதை முழுக்க போஸ்ட்மாஸ்டர் என்ற பெயர்கொண்டே வரும் கதாபாத்திரம். ஊரில் தனியாக வசிக்கும் இவருக்கும் அந்த ஊரில் ஆதரவற்று இருக்கும் சிறு பெண் ரதன் என்பவளுக்கும் இடையே மலர்ந்து கருகும் உறவினைப் பற்றிய கதை. போஸ்ட்மாஸ்டரின் அன்பிலேயே கரையும் ஒரு ஜீவனாக ரதன். அந்தப் பெண்ணிற்காகவே தன் அன்பை வேறு எங்கும் காண்பிக்காமல் சேர்த்து வைத்து அவளிடம் காண்பிக்கும் போஸ்ட்மாஸ்டர். அவளுக்கு ஆங்கிலம் படிக்க கற்றுத் தருகிறார். யாரும் இல்லை என்கிற எண்ணத்தை வளரவிடாமல் நம்பிக்கையை மட்டுமே அவள் மனதில் வளர்க்கும் போஸ்ட்மாஸ்டர். போஸ்ட்மாஸ்டருக்கு திடீரென்று காய்ச்சல் வர சிறு பெண் ரதன் என்ன செய்துவிடப் போகிறாள் என்று எண்ணும்போது கதையில் வரும் ஒற்றை வாசகம் திருப்பி போடுகிறது. "அந்தக்கணமே அன்னையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள் ரதன்" என்ற ஒற்றை வரி எந்த வயதானாலும் பெண்ணிடம் தாயுள்ளம் இருக்கும் என்று நிரூபிக்கும் வரி. பிறகு உடம்பு சுகமில்லாமல் போகவே ஊரை விட்டு கிளம்புகிறேன் என்று சொன்ன தருணத்தில் இருந்து கதைமுடியும் வரை ரதன் வெளியில் பேசுவதை நிறுத்தி உள்ளுக்குள் அழ ஆரமிக்கிறாள். கொஞ்சம் காசு குடுத்துவிட்டு போகிறேன் என்று சொல்லும்போதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு படகில் செல்லும் போஸ்ட்மாஸ்டரை திரும்பிக்கூட பார்க்காமல் ஊருக்குள் இருக்கும் போஸ்ட் ஆபீசுக்கு போய் அழுதுகொண்டே இருக்கிறாள். 
அந்தத் தெருக்களில் திரியும் ரதனுக்கு கண்ணதாசனின் வரிகளான
ஆயிரம் வாசல் இதயம், அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார், யாரோ இருப்பார், வருவதும் போவதும் தெரியாது
சொல்ல முயற்சிக்கிறேன்...ஆனால் அவள் பேசுவதாகத் தெரியவில்லை. அன்பு வலியது....
இரண்டாம் கதை: காபூல்காரன்
இதிலும் சுட்டிப் பெண் ஒருவள் காபூல்காரன் மீது அன்பு வைக்க்கிறாள். அவர்களிடையே வரும் அன்பை விட அந்த அன்பை விவரிக்கும் வார்த்தைகள் இந்தக் கதையில் ஈர்க்கின்றன. ரோட்டில் போகும் ஒரு காபூலிவாலாவின் மீது இனம்புரியாத அன்பு ஏற்படுகிறது சுட்டிப் பெண் மினிக்கு. இவர்களின் அன்பு நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது. குழந்தையின் அன்பு காபூல்காரன் மனதிலும் காபூல்காரனின் அக்கறை மினியின் மனதிலும் நீக்கமற நிறைந்துவிடுகிறது. இதனிடையே காபூலிவாலா ஜெயிலுக்கு போய்விட்டு வருகிறான். வரும் நாளன்று மினிக்கு திருமணம். மினியைப் பார்க்க முடிகிறதா. அதன்பின் இவர்கள் சந்திக்கிறார்களா. என்ன ஆகிறது என்று கதை போகிறது. இந்தக் கதையின் காட்சியமைப்பு, குழந்தை மினியின் சுட்டித்தனத்தையும் வளர்ந்த (11 வயது) மினியின் கல்யாண கோலத்தையும் விவரிக்கும் வார்த்தைகள் மூலம் மினியை வாசகனின் இல்லத்தில் ஒரு குழந்தையாக உலவ விட்டிருக்கிறார் தாகூர் என்றே சொல்ல வேண்டும். 
மூன்றாம் கதை: படித்துறையின் கதை
பொதுவாக நம்மைச் சுற்றி இருக்கும் உயிரற்ற பொருள்கள் கதைசொல்லும் படி அமைந்த கதைகள் நிறைய படித்ததாலோ என்னவோ இது மனதில் ரொம்ப ஒட்டவில்லை. ஆனால் இதிலும் அந்த படித்துறை அதில் கடந்து போனவர்களை அன்போடு பார்ப்பதும் விவரிப்பதும் நன்றாக இருந்தது. 
நான்காம் கதை: காரும் கதிரும்
ஒரு நாள் இடைவெளி விட்டு படித்ததாலோ என்னவோ கதை மனதில் ஒட்டவில்லை. 
ஐந்தாம் கதை: மனைவியின் கடிதம்
இந்தக் கதையின் தலைப்புதான் புத்தகத்தின் தலைப்பு. வீட்டில் நடந்த சில அநீதிகளை கணவரிடம் சொல்லும் விதமாக இந்தக் கதை அமைகிறது. கதையில் மூன்று பெண்கள். அதில் மிருனாள் என்ற பெண்ணிற்கு திருமணம் ஆகி 15 வருடாமாகிறது. அந்த 15 ஆண்டில் அவளைச் சுற்றி நடந்த விஷயங்கள் அதில் வந்த பிரச்சனைகள் என்ன அதை அவள் எப்படி சமாளித்தாள், மாமியார் வீட்டில் அதை யார் யார் எப்படிப் பார்த்தார்கள் என்பதை எல்லாம் பொலம்பலாக இல்லாமல் யதார்த்த வரிகளால் நடந்ததைச் சொல்லும் ஒரு கடிதம். இறுதியில் அவள் அந்த வீட்டைவிட்டு வெளியேறுவதற்கான காரணங்களாக அது மாறுகின்றன என்பதைப் பதிவிட்டு வீட்டை விட்டுச் செல்லும் மிருனாள் வாசகனின் மனதைவிட்டு செல்ல மறுக்கிறாள். 
நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இந்தக் கதையில் நான் பார்க்கிறேன். நம்மைச் சுற்றி எது நடந்தாலும் அதற்கு வெவ்வேறு கோணங்கள் இருக்கிறது. நாம் பார்க்கும் கோணமே சரி என்று சொல்ல முடியாது என்பதை வெகு அழகான சம்பவங்களால் பின்னப்பட்ட கதைதான் தான் மனைவியின் கடிதம். 
ஆறாம் கதை: கல்லின் வேட்கை
திரும்பப் படித்தால் மனதில் ஓட்டுகிறதா என்று பார்க்க வேண்டிய கதை இது. 
ஏழாம் கதை: அதிதி
இரண்டு சிறுமிகளுக்கும் ஒரு சிறுவனுக்கும் இடையில் இருக்கும் முக்கோணக் காதல் கதை. பதட்டப்படவேண்டாம். கதை எழுதப்பட்ட காலத்தை வைத்து பார்க்க வேண்டும். கதையில் வரும் ஸோனாமணி 5 வயதில் விதவையாக்கப்பட்ட சிறுமி. இப்போது சுமார் 8 வயது. அவளின் தோழி சாருவிற்கு ஒத்த வயது. கதையின் நாயகன் தாராபதன் சுமார் 13 வயது. சாருவின் பெற்றோர்கள் நாயகனை எடுத்து வளர்க்க நினைக்கிறார்கள்.. அப்படி வளர்த்து வருகிறார்கள் என்று வாசகனுக்கு தெரிந்தாலும் ஸோனாமணிக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறார் ஆசிரியர். இதனால் சாரு மீதே அவளுக்கு பொறாமை வருகிறது. தாராபதனின் கவனத்தை ஈர்க்க இவர்கள் முயற்சிக்கும் இடங்கள், அவனின் பெருமை பேசும் இடங்கள் என்று இந்தச் சிறுமிகள் / குழந்தைகள் செய்யும் காரியம் கண் முன்னே நிற்கிறது. இறுதியில் சாருவின் பெற்றோர்கள் தாராபதனையே தன பெண்ணிற்கு (அவளின் 11 வயதில்) திருமணம் முடிக்கலாம் என்று நின்னைக்கும்போது கதையில் எதிர்பாரா முடிவினைத் தருகிறார் ஆசிரியர். 
நல்ல சில கதைகளைப் படித்த திருப்தி ஏற்படுத்தும் ஒரு புத்தகம். கருவிகளில் மூழ்கியே இருக்கும் நமக்கு நம்மைச் சுற்றி சில கதாபாத்திரங்கள் வாழுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுவதில் இதுபோன்ற புத்தகமும் வாசிப்பும் பெரிய பங்கு வகிக்கிறது.

Tuesday, April 23, 2019

இரண்டு விரல் தட்டச்சு


பொதுவாகப் புனைக்கதைகளைப் புனைக்கதைகளாகவே கருதுவதுதான் எக்காலத்திற்கும் ஏற்றது. இந்தப் புனைகதைகளில் உள்ள அரைநிஜங்கள்தான் அந்தக் கதைக்கு உயிரூட்டுகிறது என்று சொல்லலாம். அப்படி நிஜங்களும் உண்மைகளும் கற்பனையும் பின்னப்பட்ட ஒரு 18 கதைகளின் தொகுப்புதான் இந்த இரண்டு விரல் தட்டச்சு. ஒவ்வொரு கதையும் ஒரு ரகம் அத்தனையும் தனி ரகம். 


பெரும்பாலான கதைகள் 2014 ஆண்டிற்கு முன் எழுதப்பட்ட கதைகள். பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை. 40 வயதினர் இந்தப் புத்தகத்தில் வரும் இடங்களையும், பொருட்களைப் பார்த்திருக்க வாய்ப்புண்டு. இல்லையெனில், கேள்வியாவதுபட்டிருப்பார்கள். நாம் மறந்து போன அல்லது மறக்கமுடியாத பல இடங்களுக்குத் தனது வார்த்தைகள் மூலம் வர்ணம் சேர்த்திருக்கிறார் ஆசிரியர். 
வளர்ந்த கிராமம், மாடு வளர்ப்பு, சோதிடம், சகுனம், இடுகாடு போன்ற வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் கதைகள். பெரும்பாலான கதைகளில் வரும் வரிகள் நாம் வீட்டில், அக்கம்பக்கத்தில் கேட்ட வரிகளாகத்தான் இருக்கும். கதாபாத்திரங்களும் வேறு பெயர்களில் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருக்க வாய்ப்புண்டு. அப்படி இருந்தாலும் இந்தப் புத்தகம் புதுசாக எதோ ஒன்றை ஒவ்வொரு கதையிலும் கொண்டுள்ளதுதான் இதன் சிறப்பு. 
இதில் பல கதைகள் என்னை ஏதோ ஒரு வகையில் வியக்க வைத்தாலும் இரண்டு கதைகள் மட்டும் மனத்தைத் தைத்தன. அம்மாவின் சாவுச் செய்தியைத் தந்தி அனுப்பவேண்டும். அதை அனுப்பும்போது ஒருவரின் மனநிலைமை எப்படி இருக்கும் என்று மிகக் குறைந்த வரிகளில் கண்ணுக்கு முன்னால் கொண்டு வரமுடியும் என்று நிரூபித்தக் கதை இது. அந்த அலுவலகத்தில் வேலைப் பார்ப்பவர்கள் தந்திகொடுக்க வருபவரை எப்படி நடத்துகின்றனர்? அங்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதைத் இயல்பாகக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். அம்மாவின் சாவுக்குத் தம்பி வந்துவிடுவானா என்ற எதிர்பார்ப்பையும் அதற்கான விடையையும் இரண்டரை பக்கக் கதை கட்டிப்போட்டுக் கண்ணில் நீரை வரவைக்கிறது. 
இன்னொரு கதை இரண்டு விரல் தட்டச்சு. எதற்காக இந்தக் கதை தலைப்பை புத்தகத் தலைப்பாய் வைத்தார் ஆசிரியர் என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கதையில் வரும் ரெமிங்டன் டைப்பரைட்டர் என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. 17 வயதில் என்னுடைய முதல் சம்பளம் 100 ருபாய். அது இந்த டைப்ரைட்டர் கொடுத்ததுதான். கல்லூரிக் காலங்களில் (பகுதிநேர) வேலை பார்த்துச் சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என்று சொல்லிக்கொடுத்ததும் இந்த ரெமிங்டன் டைப்ரைட்டர் தான்.. அதனாலேயே என்னவோ இந்தக் கதை எனக்கு ரொம்ப நெருக்கமாகிப் போனது. ஆனால் , அது மட்டும் காரணம் அல்ல என்பது என் மனதிற்கு மட்டுமே தெரிந்தால் போதும் என்பதால், ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நிறைய தந்தைமார்கள் அவர்கள் பட்ட துன்பத்தையும் வாழ்ந்த வாழ்க்கையையும் தன் மகனுக்கோ மகளுக்கோ சொல்வதேயில்லை என்பது தெளிவாகிறது. இதற்கான காரணத்தை அவர்களால் மட்டுமே சொல்ல முடியும். 
எது எப்படியோ திரு அசோகமித்திரன் எழுதிய இந்த "இரண்டு விரல் தட்டச்சு" புத்தகத்தைப் படித்தபோது நான் வாழ்ந்த பல பக்கங்களை அது புரட்டியது என்றுதான் சொல்லவேண்டும். நாளை என் வாழ்வில் நடக்கவிருக்கும் சில நிகழ்வுகளையும் (அது நடக்காமலும் போகலாம்) படம்பிடித்துக் காண்பித்தது போலவே இருந்தது...

Wednesday, December 5, 2018

மறைக்கபட்ட இந்தியா

பொதுவாக மேடைப் பேச்சை,  தகவல் தெரிவித்தல், மகிழ்வூட்டல், கதை  சொல்லுதல் என்றெல்லாம் வகைப்படுத்தலாம்.  இதில் தகவல் தெரிவித்தல் என்பது கேட்கப்  பயனுள்ளதாகவும், பல அரியத்  தகவலைக்  கொண்டுள்ளதாகவும்  இருக்க வேண்டும்.  அதைச்சுவை  குன்றாமலும் சொல்லுதல் அவசியம்.  இந்தக் கருத்து, எழுத்துக்கும் அவசியம் என்று சமீபத்தில் படித்த "மறைக்கபட்ட இந்தியா" புத்தகம் நிலைநாட்டியது. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்நூலை நமக்கு எழுதியவர் நாடறிந்த நல்ல எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணன். 

சுமார் 350 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் உள்ள 52 கட்டுரையிலும்  தகவல்  தகவல் தகவல் என்று இருக்கிறது.  ஆனால்  எங்கேயுமே தகவல் சொல்லும்  சுவை குறையவில்லை. நடையில் தெளிவு, சொல்ல வந்த செய்தியின் உண்மைத் தன்மை  அதற்கான ஆதாரங்கள் என்று பக்கத்திற்கு பக்கம் வியக்க வைத்திருக்கிறார் ஆசிரியர். நாமும்தான் அப்பப்போஊர் ஊராப்   போகிறோம் ஆனால் இவரளவுக்கு ஈடுபாட்டோடு போகிற இடத்தைப் பற்றித்  தெரிந்து வைத்திருக்கிறோமா  என்பது கேள்விக்குறிதான்.  



இந்திய தேசியக் கொடியின் வடிவமைப்பு எத்தனை முறை மாற்றப்பட்டது ? இதில்   வே சா பங்கு என்ன ? டாக்கா மஸ்லின் துணி நெய்தலின் வளர்ச்சி எப்படி தடுக்கப்பட்டது? இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கண மண என்று நாம் மனப்பாடம்   செய்துப் பாடும் பாடல் உண்மையில்  கூறுவது என்ன? ஆங்கிலேயர் தான் நமக்கு ரயில்பாதை போட்டுக்கொடுத்தார்கள் என்று பெருமைக்  கொள்கிறோம். போட்டது என்னவோ அவர்கள் தான். ஆனால்  அதை அவர்கள் சுயநலத்திற்காக போட்டார்கள் என்ற கண்ணோட்டம் யோசிக்கவைத்த  இடத்தில்  ஒன்று.  வெறும் வணிகத்திற்காக வந்த மேற்கிந்திய மக்கள் தாவர வளர்ச்சியையும் தனது லாபத்திற்கு பயன்படுத்திக்கொண்டார்கள்  என்று நினைக்கும் போது "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏத்த வேண்டும் வெளிநாட்டில்" என்ற மருதகாசியின் வைர வரிகள்ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது . ஆனால் அப்படி இருந்த ஆங்கிலேயர்களுக்குள் நல்லவர்களும் இருந்தார்கள் அவர்கள் எவ்விதம் உதவினார்கள் என்று சொன்ன இடங்கள் சபாஷ் போட வைக்கிறது ஆசிரியருக்கும் சேர்த்து.  

சுதந்திர போராட்ட காலத்தில் ரகசிய ரேடியோ (ஆசாத் இந்தியா ரேடியோ) மூலம் சுதந்திரத்  தாகம் ஊட்டிய திருவாட்டி உஷா மேத்தா, நேதாஜி அவர்களின் உழைப்பு, அகில உலகில் அவருக்கு இருந்த மரியாதை, காந்தியும் தாகூரும் கருத்து வேற்றுமையோடு இருந்தாலும் நல்ல நண்பர்களாக ஒருங்கே நாட்டிற்கு உழைத்தது, இண்டிகோ புரட்சி (இண்டிகோ விமானத்திற்கு இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை), திருடர்கள் ஜாக்கிரதை என்று ஏன் / எப்படி வந்தது; அதற்கு காரணம் யார், பங்களாதேஷ் வளர்ந்த / வீழ்ந்த கதை என இவர் பட்டியலிட்டு இருக்கும் கட்டுரைகளில் நெஞ்சைத் தொட்டவை. இது போன்ற கட்டுரைகள், எந்த விதமான புரட்சி வளர்ச்சிக்கு பாதை வகுக்கும் எந்த விதமான புரட்சி அழிவுக்கு பாதை வகுக்கும் என்று எதிர்காலத்திற்கு படம் பிடித்து காட்டும் காலக்கண்ணாடி என்றே தோன்றுகிறது.  யவனர்கள் மற்றும்  ரஷியர்களோடு வெவ்வேறு  காலக்கட்டத்தில் இந்தியாவுடன் கொண்ட பல்வேறு விதமான உறவுப் பாலங்களின்  கதைகள்  மிகவும் சுவாரஸ்யம். 

மொகலாய ஓவியங்கள் மற்றும் நுண்ணோவியங்கள் பற்றிய இரு கட்டுரைகளில்,  இவரின் வார்த்தைகள் மூலம் அந்த ஓவியத்திற்கு வேறு வகையான  வண்ணம் தீட்டி இருக்கிறார். ஒரு புத்தகம் படிக்கும் போது அது சம்பந்தமான இன்னொரு புத்தகத்தை வாசிக்கவோ அல்லது அதைப் பற்றிய தகவலை இன்னும் தேடவோத் தூண்டவேண்டும். அந்த வேலையைச்  சிறப்பாக செய்கிறது இந்தப் புத்தகம்.  

இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது. ஏற்கனவே சமூகத் தளங்களில் பலராலும் பார்க்கப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளையம், தகவலையும், செய்தியையும் கூச்சமே இல்லாமல்  திரும்ப ஒன்று அல்லது இரண்டு  மணி நேரம் பேசிவிட்டு போகின்றப்  பேச்சாளர்கள் இது போன்ற புத்தகத்தைப் படித்து வந்து புதிய தகவலை  அரங்கில் உள்ள மக்களுக்கு சொல்லலாம். சொன்னால் பேச்சாளர்களும் மதிக்கப்படுவார்கள். பார்வையாளர்களும் பயன்படுவார்கள். 

மறைக்கப்பட்ட இந்தியா என்னும் இந்த  நூல் பல அறியத் தகவலை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. "சஞ்சாரம்" என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு எஸ் ரா விற்கு வாழ்த்துக்கள். 

Tuesday, November 6, 2018

தொல்லியல் ஆய்வுகள்

புடிக்காத விஷயத்தைக் கூட பிடித்த விஷயமாக மாற்றும் வல்லமை சிலரின் எழுத்துக்களுக்கு உண்டு. அந்த விதத்தில் வரலாற்றுப் பாடத்தில்  வெகுவாக அக்கறை இல்லாத ஒருவனை  இன்று வரலாற்றுப் புத்தக  வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வைத்திருக்கிறது ஒரு புத்தகம். அப்படி  சமீபத்தில் வாசித்த புத்தகம் 'தனிச்சிறப்புமிக்க புகழ்மிகு  தொல்லியலாளர்' என்ற  பட்டம் பெற்ற பேராசிரியர் முனைவர் கே.வி இராமன் எழுதிய தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை). நூலாசிரியர் பணிபுரிந்த காலத்தில்  சிறப்புமிக்க நகரங்களில் அகழ்வாய்வு செய்த அனுபவத்தை கட்டுரை வடிவமாக்கி  அந்த காலத்திற்கே நம்மை அழைத்துச்  சென்றிருக்கிறார்.




கிமு 300 முதல் கிபி  300 வரை தமிழ்நாட்டில் நிகழ்ந்த சில முக்கியமான கைத்தொழில்கள் அல்லது கிராமப்புறத் தொழில்கள் பற்றிச் சொல்லித்   துவங்கும் கட்டுரையிலேயே மட்பாண்டத் தொழில், வண்ணப்புனைவு, சுடுமண் பொருட்கள், நெசவு மற்றும் உலோகம் சம்பந்தப்பட்ட தொழில்கள் இருந்திருக்கின்றன என்றும் அதனை எவ்வளவு சிறப்பாகச் செய்தார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இரும்பைக்   காய்ச்சி உருக்கிடுவீரே என்று பாரதி சொன்னதை அன்றே செய்திருக்கிறான் மனிதன்.
வரலாற்றில் நாம் கரிகால் சோழனுடைய ஆட்சியையைப் பற்றியும் அவனுடைய தலைநகரமான காவிரிப்பூம்பட்டினத்தையும் பல்வேறு முறை படித்திருப்போம் ஆனால் அப்படிப்பட்ட நகரின் வரலாற்றை பின்னணியைப்  படம்பிடித்து காட்டியிருக்கிறார் இந்த தொகுப்பில். சமயங்களும் சமய சிந்தனைகள் வளர்ந்த விதத்தையும் ,   அந்த  ஊரில் நடந்த பல அழகிய விஷயங்களை  அருமையாக  படம் பிடித்திருக்கிறார். வெறும் அனுபவப் பதிவுகளாக இல்லாமல், எழுதிய எழுத்தின் மூலம் நம்மை அந்த காலகட்டத்திற்கு கூட்டி செல்லும் திறன் அபாரம். தான் எழுதிய எழுத்திற்கு தகுந்த காட்சியமைப்பை வாசகனின் கண்முன்னே கொண்டுவந்துள்ளார். நாம் எப்படி ஓர் இடத்தின்  வரலாற்றை வகைப்படுத்த வேண்டும் என்பதைப்    பற்றியும் விவரித்திருப்பது என்னைப் போன்ற  வாசகனுக்கு பயனுள்ளத்   தகவலாக இருக்கிறது.

பழைய மனிதர்கள் என்று நாம் ஒதுக்குபவர்கள் தான் நிறைய கண்டுபிடிப்புகளுக்கு விதை போட்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. கற்கருவிகளை பயன்படுத்தியது தொடங்கி விலங்குகளைப் பழக்குவதிலும் பெரும் திறமை கொண்டிருந்தனர் என்று படிக்கும்போது அவர்களின் திறமையையும் அவர்களின் அறிவுக்கூர்மையையும் வியக்காமல் இருக்கமுடியவில்லை.

தொல்லியல் ஆய்வுகள் இல்லையெனில் மனிதனின் கடந்துவந்த பாதையும் அவனுடைய வரலாற்றையும் அறிய இயலாது. நாம் செய்ய வேண்டிய நீண்ட வாசிப்புக்கு இந்நூல் ஒரு சிறந்த துவக்கமாக இருக்கும்.  கொஞ்ச காலம் வேலை  பார்க்க போகும் அலுவலகம் பற்றியே நிறைய தெரிந்து வைத்திருக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம் அப்படி இருக்கையில் வாழும் காலம் வரை இருக்க போகும் இந்த மண்ணின் வரலாறை தெரிந்துகொள்வது நம் கடமை என்றே தோன்றுகிறது.


Friday, March 16, 2018

எதையும் ஒரு முறை

எழுத்தாளர்  உலகின் ஆசான் என்று போற்றப்படும் சுஜாதாவின் மீது தீராத காதல் கொண்ட ஒரு நண்பர் சொன்னதின் பெயரில் அவரின் "எதையும் ஒரு முறை" நாவலை  ஒரு முறை படிக்கலாம் என்று முடிவெடுத்தேன். இதை வாங்கியபோது டாக்ஸியில் ஒரு இன்டெரெஸ்ட்டிங் சம்பவம் நடந்ததை வேறொரு பிளாகில் சொல்கிறேன். சுஜாதா தன் ஆரம்ப காலத்தில் எழுதியதாக சொல்லப்பட்ட இந்த கதையைப் பற்றி எனக்கு எதிர்பார்ப்பு ஏராளமாக இருந்தது.





சின்ன நாவல்தான் என்றாலும் சுமார் 40 பக்கம் வரை நான் எதிர்பார்த்த அல்லது (அந்த நண்பரிடம்) கேட்ட அந்தக் கதை வரவே இல்லை. ஆனால் இன்வெஸ்டிகேட்டிவாக இருப்பதால் கதையை தொடர்ந்து படித்தேன். கணேஷ் - வஸந்த் மற்றும் ஒரு சட்டக் கல்லூரி மாணவியைச் சுற்றி கதைக்களம் - கூவம் நதிக்கரையில்  ஒதுங்கிய ஒரு பெண்ணின் மரணம் - அதன் பிண்ணனியை தேடும் இந்த மூவர். இந்தக் கதைக்கு இதுதான் தீர்வு என்று கூறாமல் வாசகனின் கற்பனைக்கு விட்டுவிடும் விதமும், கதையை முடிக்கும் விதமும் ஒரு  முறையல்ல பலமுறை சபாஷ் போட வைக்கிறது எழுத்தாளருக்கு.

கணேஷ் வஸந்த் தோன்றும் மிகப் பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று. என்று அறிகிறேன். சிறுகதை / குறுநாவலுக்கான குறைந்த கதாபாத்திரங்கள்; ஒவ்வொருவருக்கும் தக்கதொரு அறிமுகம் என்று கனகச்சிதமாக கதை நகர்கிறது. ஆதித்ய குமாரைத்  தேடி அலைந்த இந்த மூவர் எப்படி அவரை நெருங்குகின்றனர் என்று தெரிந்து கொண்டு அடுத்தது என்ன எப்படி என்று  யோசித்துக்கொண்டிருக்கும்போதே கதை முடிந்துவிடுகிறது.  கடைசி வரை நான் எதிர்பார்த்த அல்லது கேட்ட (அல்லது புரிந்துகொண்ட) கதை வரவில்லை. அந்தளவில் சற்று ஏமாற்றம். ஆனால்  கதையின் எதார்த்தத்தை வெகு இயல்பாக இரசிக்க  வைக்கிறார் ஆசிரியர்.

வாழ்வில் தான் நினைப்பதெல்லாம்  ஒரு முறை செய்யவேண்டும் என்று நினைக்கும் வில்லன். இல்லை இல்லை - வில்லன் என்று, நம்மையே  இவன்தான் வில்லனாக இருப்பானோ  என்று நினைக்கவைப்பது கதையின் பெரிய ப்ளஸ். எதையும் ஒரு முறை வாழ்க்கையில் செய்து பார்க்கும் எண்ணம் கொண்டவன் ஏன் கொலை செய்திருக்கக் கூடாது என்று தோன்ற வைத்தாலும் அதை அவன் செய்திருக்க மாட்டான் என்ற எண்ணத்தையும் “கேல்குலேடட் ரிஸ்க் தான் எடுப்பேன்“ என்று  அவன் வாயிலாகவே சொல்ல வைப்பதும் ஸ்வாரஸ்யம்.

சென்னையின் சிறு சிறு வீதிகளில் தன் உடலை மூலதனமாக்கி வாழ்க்கையில் சம்பாதிக்கும் பெண்கள், தன் சுகத்துக்காக இவர்களை இரையாக்கும் மனிதர்கள், பெண்களை அனுபவிக்கும் ஒரு கதாபாத்திரத்தின் வீட்டில் இரண்டு நாள் முன்னர் பார்த்த அழகுப் பதுமை அடுத்தமுறை போகும்போது இல்லாமல் இருப்பது போன்ற விஷயங்களை காட்சிப்படுத்தும் விதம் ஒவ்வொன்றும் வலி தரும் அழகான காட்சிகள்.

இந்த கதைக்கான உயிரோட்டம் எதையும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்ற வித்தியாசமான எண்ணம் தான் என்று எனக்கு தோன்றுகிறது. அந்த எண்ணத்திற்காகவாது ஒரு முறை இந்த புத்தகத்தை அவசியம் படிக்கவேண்டும்.

சுஜாதாவின் கதையை விமர்சிக்கும் அளவுக்கு நீ பெரிய ஆள் ஆயிட்டியான்னு கேக்கறவங்களுக்கு என்னோட பதில் ஐயம் சாரி. யூ ஹவ் மிஸ்டேக்கன் மீ. 

வழக்கமாக இல்லாமல் இந்த பதிவில் இவ்வளவு இங்கிலிஷ் வர்ட்ஸ் வருவதற்கான காரணத்தை நீங்கள் இப்போது யோசித்தால் வெல்கம் டு தி வர்ல்டு ஆப்  சுஜாதா.

Sunday, March 11, 2018

சந்திப்புகள் பல விதம்

சுமார் 50 60  வயது இருக்கும்... MRT யில் ஏறியவுடன், என்னிடம் வந்தவர் கோவிலுக்கு தானே போறீங்க நானும் கூட வரவா என்று கேட்டார்.. எனக்கும் சரியாக வழி தெரியாது ஆனால் போகலாம் என்று சொல்லிவிட்டு சுஜாதாவின் எதையும் ஒரு முறையை முதன்முறையாகப்  படித்துக்கொண்டிருந்தேன். இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் அவரே என்னை அழைத்து போகலாமா என்று கேட்க நாங்கள் இருவரும் நடக்க ஆரம்பித்தோம். வயது தெரியாத உடை; அமைதியான பேச்சு; கைப்பேசியை அவ்வப்போது பார்த்துக்கொண்டு நடந்து வந்தார். வந்தவர் என்னிடம் எத்தனை ஆண்டுகளாக இங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் பதில் சொன்ன உடன் என் குடும்பத்தை பற்றியும் விசாரித்தார். என்னைப் பற்றி அறிமுகம் இல்லாத ஒருவர் ஏன் விசாரிக்க வேண்டும் என்றே தோன்றாத அளவிற்கு அக்கறையாகக்  கேட்டார்.

பிறகு எங்கே வந்தாலும் எங்கே போய் வேலை பாத்தாலும் கடைசி காலத்திற்குக்  கொஞ்சம் பணம் வேணும். சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.  குழந்தைகள் வளர்ந்தவுடன் நமக்கு  ஏதாச்சும் ஒன்னுன்னா தேவை படற  அளவுக்கு வச்சிருக்கணும். இல்லைனா வாழ்க்கையில யாரைப் போய் கேட்பது என்றே தெரியாது என்று அவர் கூறியபோது  ஏனோ அவரின் முகத்தைப்  பார்க்க எனக்கு தைரியம் வரவில்லை. Spending pattern இந்தக் காலத்து மக்களுக்கு தெரியவில்லை because of their needs என்று அவர் சொல்லும்போது பணத்தின் அருமை தெரிந்து வளர்க்கவும் வளரவும் தயாராக இருந்த தலைமுறையினர் அவர் என்பதை சொல்லாமல் எனக்கு சொன்னது போல் இருந்தது.  இந்தக்காலத்து இளைஞர்களுக்கு நாங்கள் சொல்லத் தயாராக இருக்கிறோம் - அவர்கள் கேட்கத் தயாராக இல்லை ... நாங்கள் கேட்கத் தயாராக இருந்தோம் சொல்ல ஆள் இல்லை என்ற உணர்வினை அவ்வப்போது கூறிவந்தார்.  ஆனால் எந்த இடத்திலும் யாரையும் விட்டுக்கொடுக்காமல் பேசியது அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு கலைதான்.


கோவில் அருகே வந்துகொண்டிருக்கும் போது கூட்டத்தை சமாளிக்க தொண்டூழியர்கள் எங்களை வரிசையில் இணையச் செய்தனர். எங்களின் உரையாடலில் மீண்டும் எங்களை நாங்களே இணைத்துக் கொண்டோம்.   புக்கிட் மேரா மற்றும் ஜலான்காயு போன்ற இடங்களில் இருந்தார்கள். வேறே வேறே இடத்தில இருந்தவர்களை ரதத்தில் கடத்திக் கொண்டு வந்தோம். அவர்களை ஒவ்வொரு இடத்திலும் பாத்திருக்கேன் நான். எங்கு எங்கு இருந்தோ நாங்கள் இந்த முருகரையும் மற்றவர்களையும் கொண்டு வந்து இப்போது இங்கே சேர்த்திருக்கிறோம் என்று ஸ்தல வரலாறை இவ்வளவு மரியாதையாக கச்சிதமாக கேட்டதே கிடையாது. "கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது" என்று  தன்னை கடவுள் மறுப்பாளர் என்று மய்யமாக சொல்லாமல் மேடைபோட்டு சொல்லும் ஆண்டவர் படத்தில் பார்த்த பாடல்வரிகள் நினைவிற்கு வந்தன.

வரிசை மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றியும் சொல்லத் துவங்கினார். . 48 ஆண்டுக்கால வேலை அனுபவம் அதுவும் ஒரே அலுவலகத்தில். பல்வேறு இடையூறுகள். அதெல்லாம் தாண்டித்தான் இப்போது இங்கு வந்திருக்கிறேன். வேலை நாட்களில் என்னோட boss "நீ ரொம்ப protective" என்று என்னைப் பார்த்து சொல்லுவார்.. நான் அதற்கு you can get the job done out of me and my team only if I take good care of them என்று சொல்லுவேன். இந்த வரிகளைச் சொல்லும்போது அவர் குரலில்  ஒரு கர்வத்திற்கு பதில் சோகம் ஒலித்தது. என் ஐயத்திற்கு அவரே விடையும் அளித்தார். 48 ஆண்டுக் காலம் என்பதால் பல தலைமுறைகள் என்னிடம் வேலை பார்த்திருக்கிறார்கள். வேலை வாங்குவதிலும் வேலை செய்வதிலும் சமுதாயத்தில் இப்போது நிறைய மாற்றங்கள் என்று திடீரென்று spiritual philosophy யில் இருந்து corporate philosophyக்கு மாறினார். 

அந்த ஒரு மணிநேரத்தில் எவ்வளவோ செய்திகளை அவர் பகிர்ந்துகொண்டாலும், பெருமையுடன் அவர் பகிர்ந்துகொண்ட ஒரு செய்தி- தன்னுடைய Pioneer Generation அட்டையை காண்பித்த போது என்று சொல்லலாம். இந்த அரசாங்கம் அவர் வயது ஒத்தவரை எப்படி எல்லாம்  பார்த்துக்கொள்கிறது என்று  நெகிழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் நாங்கள் எங்களுக்கு கொடுத்த சலுகையை எந்த விதத்திலும் துஷ்ப்ரயோகம் செய்ய மாட்டோம் என்று சிறிதும் கர்வம் கலக்காமல் சொல்லிக்கொண்டே,  தன் வயது ஒத்த முதியவர்களை தனக்கு முன்னே வரிசையில் அனுப்பிக்கொண்டே இருந்தார். இருந்த ஒரு சாப்பாடு பொட்டலத்தை அங்கே இருந்த ஒரு குழந்தைக்குக் கொடுத்துவிட்டு குழந்தைப் போல் சிரித்து  பார்வையில் இருந்து அவர்  மறைந்தபோது,  வந்த "இந்த  சந்திப்பு ஏன் இப்போது முடிவுக்கு வந்தது" என்ற கேள்வி  2 வாரம் கழித்தும் இன்னும் என் மனதில் இருக்கிறது.. ஆம் சந்திப்புகள் பல விதம்..  


Saturday, December 23, 2017

இரண்டாம் உலகப் போர்

ஹிட்லர் முஸோலினி என்ற பெயரை எடுத்தாலே, எனக்கு பாடம் எடுத்த வரலாறு ஆசிரியரை, ஹிட்லர் மற்றும் முஸோலினியைப்  போல பார்த்து பழகிய நான், இந்தப் புத்தகம் கைக்கு கிடைத்து ஒரே வாரத்திற்குள் படித்து முடித்த வரலாற்று அனுபவம் தான் இந்தப்பதிவு.  மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை, குரூரங்களை அனாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப் போர் என்ற உண்மையை அனாயாசமாக எழுதியப்  புத்தகம். 


அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசி ஆராயப்பட்ட மருதனின் நூல் "இரண்டாம் உலகப் போர்". 310 பக்க புத்தகம் முழுவதும் பல்வேறு செய்திகள், கதைகள், தனிமனித வழிபாட்டு முறைகள், அக்கிரமங்கள், அராஜகங்கள் என்று இருந்தாலும்,  புத்தகத்தை கீழே வைக்கமுடியாதபடி ஒரு விறுவிறுப்பு. மூன்று முக்கியமான விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் பார்க்கலாம். ஒன்று - யூபர் (ஜெர்மானிய இராணுவத்தினர் அவரை இப்படித்தான் அழைத்தனர்) ஹிட்லர், இரண்டு - ஒப்பந்தங்கள், மூன்று - வரலாற்று புள்ளிவிவரங்கள்.

ஹிட்லர்  - முதல் உலகப் போருக்கு பிறகு ஜெர்மனி வீழ்கிறது - எழுகிறார்   ஹிட்லர்.  சிந்தனைவாதி, நாட்டு பற்று அதிகம் கொண்டவர், ஒழுக்கமானவர்; கலையில் ஆர்வமிக்கவர்; இப்படி அறிந்திராத பல தகவல்கள். ஹிட்லர் தான் ஜெர்மனி - ஜெர்மனி தான் ஹிட்லர் என்ற அளவிற்கு யாரின் ஆதரவும் இல்லாமல் தன் கனவினை நோக்கி பயணித்த அனுபவம் வாய்ந்த வாழ்க்கை. சான்சிலர் பதவி கிடைத்தும் தான் இருக்கும் இடத்தை தக்க வைக்க ஓயாத உழைப்பு, மக்களை தன் பக்கம் ஈர்க்கும் வசீகர பேச்சாற்றல், இராஜதந்திரி, பத்திரிக்கையாளர் அடுக்கிக்கொண்டே போகலாம்... பல இடங்களில் ஒரு சூப்பர் ஹீரோவாகத் தான் காட்சியளிக்கிறார். இந்தப் புத்தகம் படித்து முடித்தவுடன், ஹிட்லர் பற்றிய செய்திகளை ஒரு மாதத்திற்காவது வாசகர்கள் தேடித்தேடி படிப்பார்கள் என்று சொல்லலாம். 

இவ்வளவு நல்லவரா என்று நினைக்கும்போது தான் அத்தனை அத்துமீறல்களும் அரங்கேறுகின்றன. திட்டமிட்டு செயல்பட்டு ஒவ்வொரு நாட்டையும் நாட்டு மக்களையும் சிறைபிடித்து சித்திரவதை செய்து அவர்களுக்கு மரணபயத்தை கண்ணில் காட்டிய யமன் என்று தான் சொல்ல வேண்டும்.  இதற்கெல்லாம் பெரும் காரணம் மண்ணாசை தான் என்று வரலாறு நமக்கு சொல்லிக்கொடுத்தாலும், அவருக்கு யூதர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி, அவரைச் சுற்றி இருந்த  துரோகிகள், நயவஞ்சகர்களும் காரணம் என்றால் மறுக்கமுடியாது. (காலகாலமாக தலைமையில் இருப்பவர்களுக்கு, அடுத்தத் தலைமுறைக்கு தலைமையைத் தர தயக்கம் / வெறுப்பு இருந்து வருகிறது போல).  பெரும்பாலான நேரம் தன்னுடைய அராஜக அதிகாரத்தின் மூலம் இந்த உலகத்தை கட்டுக்குள் வைத்திருந்த யூபர் ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற செய்தியைப் படித்தவுடன் நெஞ்சம் கனப்பதை தவிர்க்கமுடியவில்லை.


ஒப்பந்தங்கள் - சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய நாடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டன. அத்தனைக்கும் இரண்டு ஒற்றுமைகள் - ஒன்று இவையனைத்தும் சடலங்கள் மீது போடப்பட்ட சமாதான ஒப்பந்தங்கள் - இன்னொன்று எவையுமே பின்பற்றபடவில்லை. அப்பறம் எதற்கு ஒப்பந்தம் என்பது தான் இந்தப் புத்தகத்தில் அடுத்து அதிகம் சொல்லப்பட்ட சுவாரஸ்யமான செய்திகள்.  தன்னோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்ட எந்த நாடும் முன்னேறிவிடக்கூடாது, என்பதில் வல்லரசு என்று தன்னைத்தானே பிரகடனம் செய்துகொண்ட நாடுகள்  அத்தனையும் அதிக அக்கறை செலுத்தியது.  அவ்வளவு வன்மம் - அவ்வளவு அநீதி.   வாழ்க்கை என்பது வெறும் துயரங்களின் அணிவகுப்பு என்று இந்தக்காலத்தில் நினைப்பவர்கள், அன்று இந்த நயவஞ்சகர்களிடம் சிக்கி தவித்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொண்டால்,  வாழ்க்கைப் பற்றியப்  பார்வை மாறிவிடும் என்பது உறுதி. 

புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு நாடும் இராணுவத்திற்கு எப்படி, எத்தனை ஆட்கள் சேர்த்தன, ஆள் சேர்ப்பதில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவந்தன, போருக்கு என்னென்ன யுக்திகள் (strategies) பயன்படுத்தப்பட்டன, எத்தனை நாடுகள் பங்கேற்றன, எத்தனை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன, ஒவ்வொரு போரிலும் எத்தனை பேர் மாண்டார்கள்,  எத்தனை டேங்கர்கள் பயன்படுத்தப்பட்டன, வெற்றிபெற்ற நாடு அதன் இராணுவத்தினருக்கு என்னென்ன பதக்கங்கள் வழங்கின,  என்பதைப் பற்றியெல்லாம் பிரித்து மேய்ந்திருக்கிறார் ஆசிரியர்.

முதல் உலகப்போரில் தொடங்கி, இரண்டாம் உலகப் போர் முடிந்து சில காலம் வரை நடந்த அத்தனை முக்கியமான நிகழ்வுகளையும் ஒரு ஐந்து பக்கத்திற்குள், தேதி வாரியாக அடுக்கியிருப்பது நிறைய பேச்சாளர்களுக்கு / எழுத்தாளர்களுக்கு ஒரு quick reference guide என்று சொல்லலாம். தான் சொன்ன வரலாற்று தகவலுக்கான ஆதாரங்களையும் அடுக்க மறக்கவில்லை ஆசிரியர். மொத்தத்தில் கண் இமைப்பதற்குள் சேதங்கள் நிகழ்ந்துவிட்டன என்று சொல்ல முடியாதபடி, வடிவேலு சொல்வதைப் போல் அத்தனையும் plan பண்ணி செய்யனும்னு வெச்சிசெஞ்ச போர் தான், இரண்டாம் உலகப் போர் என்பதை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.